உமையாளுக்கு ஒரு கடிதம் - பள்ளிக்கூடம், முதல் நாள்
- Johneh Shankar
- 4 days ago
- 2 min read
பள்ளி செல்ல நேரம் ஆச்சு!
உன்னை அசைத்து எழுப்புகிறது ஒரு கை…
உன் கழுத்து நோகாமல், தூக்கம் கலையாமல் தலையணையை
வசதியாக நகர்த்தி வைத்துத் தலை கோதி விடுகிறது
மற்றொரு கை!
அன்பு மகளே உமை!
இன்று நீ பள்ளிக்கூடம் சென்ற முதல் நாள் (வைகாசித் திங்கள் 26-சூன் 09) - எல்லா பெற்றோர்களைப் போலவே எங்களுக்கும் இன்றைய நாள் நினைவுப் பேழையில் மற்றொரு முத்து.
வைகாசி விசாக நன்னாளில் உன் கல்வி துவங்கியிருப்பது முருகனின் அருள். ஔவை அருளிய விநாயகர் அகவலும், குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலையும் ஓதி உன்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றோம் நானும் அம்மாவும். இறையருள் பரிபூரணமாய் உனக்கு உண்டு. ஆனால் நீ கற்றுக்கொண்ட முதல் குறளை நினைவில் கொள், தெய்வத்தால் ஆகாது, முயற்சியே கூலி தரும் என்று.
இனி இந்த நாளைப் பற்றி சில வரிகள்…
நீ பிறந்து 3 வருடங்களாக எங்களைப் பிரிந்து இருந்த நேரம் மிகவும் சொற்பம். ஆனால் கல்விச்சாலை திறந்து முதல் நாளே 8.30 மணி தொடங்கி 2 மணி வரை எங்களைப் பிரிந்து தனியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அழுகையும் தூக்கமுமாக உன் முதல் நாள் பள்ளிக்கூடம் நிறைவடைந்திருக்கிறது. உன்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நான் மயங்கி விழும் நிலைக்குச் சென்றுவிட்டேன். முதன் முறையாக உன்னை மற்றொருவர் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, இதோ வருகிறேன் என்று பொய் சொல்லி ஏமாற்றி ஓடி வந்திருக்கிறேன், இந்த உணர்வு சுகமான ஒரு வலியாக இருக்கிறது. இதுவரை உணர்ந்திராத புது வேதனை, ஆனால் மகிழ்ச்சியளிக்கிறது.
வீடு திரும்பியபின் உன் குட்டிக்குட்டி காலணிகளை வாசற்படியில் காணாமல் ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது. உன் கொலுசின் ஒலியும், கீச்சுக் குரலும் இல்லாத அமைதி, மெத்தக் கணத்தது. செவிகள் இப்போது உன் குரலை கேட்கக் காத்திருக்கின்றன, நீ பிறக்கும் முன்பு இருந்தது போலவே. பள்ளி முடிந்து நீ வெளியே வரும்போது உன் முகத்தில் தெரியும் சோர்வு கலந்த புன்னகை, மீண்டும் உன்னைப் பெற்றெடுத்த உணர்வைக் கொடுக்கிறது. கல்வி என்பது ஒரு விதத்தில் புதுப்பிறப்புத் தான். நேற்றைய அறியாமையில் இருந்து மீண்டு, நாளைய அறியாமையை நோக்கி, இன்றைய அறிவைக் கூர் தீட்டிப் பாய்வதுதான் இந்தப் பள்ளிக்கூட நாட்கள். ஆனால் அது இனிப்பாகவும், கதகதகப்பாகவும் இருக்கக்கூடிய ஒன்று அல்ல.
உன் நிம்மதியான கூட்டில் இருந்து வெளியே வெகு தூரத்தில், வெகு உயரத்தில் அது உன்னை இழுத்துச் செல்லவிருக்கிறது. கசப்பாகவும், குளிராகவும், வெப்பமாகவும் உன்னைப் பட்டை தீட்டப் போகிறது இந்த பள்ளிப்பருவம். எனவே பொறுத்துக்கொள் மகளே! நீ செதுக்கப்படவிருக்கிறாய். எனவே உளியின் அடிகளைப் போல இந்தச் சிறு வலிகளைப் பொறுத்துக்கொள். மிக நிச்சயமாய் அது எதிர்காலத்தின் பெரிய வலிகளில் இருந்து உன்னைக் காக்கும்!
என்னைப்போலவே உனக்கும் பள்ளிக்கூடம் கசக்கிறது. எனவே இனி வரும் நாட்கள் காலை நேரம் போராட்டம் நிறைந்ததாகவே இருக்கப்போகிறது என நினைக்கிறேன். ஒரு சில வாரங்களில் நீ பழகி விடுவாய் என்றும் நம்புகிறேன். கசப்பை விரும்ப நான் கற்றுக் கொண்ட போது எனக்கு வயது 28. எனக்குக் கசப்பு அறிமுகமான போது அது திணிக்கப்படுவதாய் உணர்ந்தேன். உனக்கும் இப்போது அப்படித்தான் இருக்கும். ஆனால் இனிப்பு தான் ஆபத்தானது. இதை நீ எப்போது புரிந்து கொள்வாய் என்று சிந்திக்கிறேன். பொறுமையாகக் காத்திருக்கப்போகிறேன்.
இந்தக் கடிதம் உன்னை வந்து சேர வருடங்கள் ஆகும். கடிதமாக உடனே வந்து விடும், ஆனால் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு சில ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது. அதை நோக்கி உன்னை வேகமாகக்கடத்துவதே உன்னைப் பள்ளிக்கு அனுப்புவதன் நோக்கம். அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வாயாக.
வாழ்க்கையில் சில நாட்கள் ஒரு முறை மட்டுமே நிகழக்கூடியன. அப்படி ஒரு நாள் தான் உன்னைப் பள்ளிக்கு அனுப்பிவைத்த இந்த முதல் நாள். இந்த நாளை வார்த்தைகளாக இந்தக் கடிதத்தில் பதிவு செய்ய முடிந்தது, நான் பள்ளிக்குச் சென்றதால் தான். இந்த நாளில் எனக்குத் தமிழ் பயிற்றுவித்த அத்தனை ஆசிரியர்களையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன். திருமதி. மனோரமா, திருமதி. பிரேமா, திருமதி. மங்கையர்க்கரசி, திருமதி. செல்வகுமாரி ஆகியோருடன், இனி உனக்குத் தமிழைப் பயிற்றுவிக்கப்போகும் ஆசிரியர்களின் திருவடிகளையும் தாழ்ந்து பணிந்து நன்றியைப் பதித்து வைக்கிறேன்.
மதியம் இரண்டு மணியோ, மாலை நான்கு மணியோ, அல்லது 2042-வது ஆண்டோ, சீக்கிரம் பள்ளி முடித்து, நன்றாகப் படித்துவிட்டு வா மகளே… வாழ்க்கை உனக்குக் கற்றுக் கொடுப்பதை சிந்தாமல் சிதறாமல் அப்படியே பெற்றுக் கொள்ள!
அன்புடன்,
அப்பா.

留言