top of page

திருக்குறள் - ஆன்மிக நூல் - ஆனால் ஆன்மிகம் என்றால் என்ன?

  • Writer: Johneh Shankar
    Johneh Shankar
  • 3 days ago
  • 3 min read

திருக்குறள் ஆன்மிக நூலா, இல்லையா என்று பார்ப்பதற்கு முன்பு, ஆன்மிகத்திற்கான விளக்கம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்வது நல்லது.


ஆன்மிகம் என்றால் என்ன என்று கூகுளானந்தா, தனது AI-திருஷ்டி மூலம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்,


"ஆன்மீகம் என்பது ஆன்மா, தன்னுள் இருக்கும் சக்தி, மற்றும் பரந்த உலகுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கிய அகநிலை அனுபவமாகும். இது தன்னுள் இருக்கும் உண்மையை அறிதல், ஆன்மீக பயிற்சி, அல்லது உலகளாவிய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை உள்ளடக்கியது. ஆன்மீகம் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட அனுபவம், அது ஒருவரை தன்னுள் இருந்து உயர்ந்து, மேலும் ஆழமான புரிதல் மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடும் ஒரு பயணமாகும்............"


இவரைச் சொல்லிக் குற்றமில்லை. காரணம், இவரது இந்தப் பதில், இதுவரை மனிதருள் மேதாவிகள் எழுதி வைத்த கருத்துக்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆன்மிகம் என்றால் என்ன என்று கேட்டால் சராசரி மனிதர்கள், சாமானியர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ள கருத்தாக்கமும் இதனை ஒத்துத்தான் இருக்கும். ஆனால் ஆன்மிகம் என்பதன் எளிய, உண்மையான பொருளை, மெய்ப்பொருளை சமூகத்தில் நாம் வெளிக்கொணர வேண்டும்.


நான் என் மாணவர்களுக்குக் கூறும் விளக்கம் இதுதான். ஆன்மிகம் என்பது, ஆன்மாவாகிய நீ/நான், சக ஆன்மாக்களின் துயர் நீக்கவும், உயர்வுக்காகவும், சமத்துவத்திற்காகவும், தெளிவுக்காகவும், இன்பத்திற்காகவும், ஆற்றும் தொண்டு அவ்வளவே.


சமூகத்தின் மிகப்பெரும் ஆன்மிகவாதிகள் கோயில்களிலோ, ஏர் கூலர் போட்ட மேடைகளிலோ, ஏக்கர் கணக்கில் பரந்திருக்கும் யோகா கூடாரங்களிலோ இல்லை. அவர்கள் சாலைகளில் திரிகிறார்கள். சக ஆன்மாக்களுக்காக வியர்வை சிந்துகிறார்கள். நசுக்கப்பட்டாலும், நன்மை பயக்கிறார்கள். துப்புரவுத் தொழிலை நேர்த்தியாகச் செய்யும் ஒரு தொழிலாளியை விட பெரிய ஆன்மிகவாதியைக் கண்டுபிடித்துவிட முடியாது. சக மனிதர்களுக்காக உழைப்பவர்களே ஆன்மிகவாதிகள்.

சக மனிதரை நேசிப்பதே ஆன்மிகம். நேசித்தலின் வெளிப்பாடு நேர்மை, தியாகம், உழைப்பு. இந்த அடிப்படையில், இந்த அடிப்படையில் மட்டுமே திருக்குறள் ஒரு ஆன்மிக நூல் என்பதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஆன்மிகம் என்பது, நாம் காணாத, காண முடியாத ஒரு பரமான்மாவைப் பற்றிப் பேசுவதும், பாடுவதும், ஆடுவதும் ஆகிய கூத்து என்றால, திருக்குறள் சர்வ நிச்சயமாக ஆன்மிக நூல் அல்ல.


திருக்குறளில் ஆன்மிகம்


ஒருவேளை திருவள்ளுவரின் நோக்கம் ஒரு so-called-ஆன்மிக நூலை இயற்றுவதாக இருந்தால், ஒவ்வொரு அதிகாரத்தின் தொடக்கத்திலும் ஒரு கடவுள் புகழ்ச்சிப் பாடலை வைத்திருக்கலாம். ஆனால் அவர் 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்தை மட்டும் கடவுள் வாழ்த்து என்று நிறுத்திக்கொள்கிறார். அந்த ஒரு அதிகாரத்திலும், பகுத்தறிபவன் (பகவன்) முதற்றே உலகு என்று தொடங்கி, ஒவ்வொரு குறளிலும் தாள் சேர்தல், அடி சேர்தல், நெறி நிற்றல், அடியை வணங்குதல் என்பதாக அவ்வழி பகுத்தறிந்து செயல்படுபவன் (கடவுள், கடவுள் மட்டுமே அல்ல) வழியில் வாழ்க்கையைச் செலுத்தினால் கற்றதன் பயன் கிடைக்கும்,நிலமிசை நீடு வாழலாம், இடும்பை இருக்காது, மனக்கவலை மாறும், குணம் இருக்கும், இருவினை சேராது, பிறப்பெனும் ஆழியை நீந்தலாம் என்ற நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களை மட்டுமே கூறியிருக்கிறார். இங்கே அறிவும், உழைப்புமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்பதை நோக்குங்கள். சடங்குகள் மற்றும் வெற்று நம்பிக்கை சார்ந்த குருட்டு வழிபாடு குறித்து திருக்குறளில் எந்தவொரு கருத்துமே இல்லை, எனவே இது உலகப்பொதுமறை எனும் சிறப்பு பெறுகிறது. எந்தச் சமயத்தாரும் திருக்குறள் நெறி நின்று அவரவர் ஆன்மிக வாழ்வை மேற்கொள்ளலாம். இது நாத்திகமாக உங்கள் அறிவுக்குத் தோன்றினால், அது உங்கள் குறைபாடே ஆகும்.


மேலும் திருக்குறளில் கூறப்படும் ஆன்மிகமானது, இகத்தில் நம்மோடு வாழும் சக உயிர்களுக்கான தொண்டு என்பதன் சான்றாகச் சில குறள் வெண்பாக்களைக் காணலாம்:


அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போற் போற்றாக் கடை

-பிற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுதல் அறிவின் பயன். இந்த ஒரு குறளே போதும், திருக்குறள் சமயநூல் அல்ல, திருவள்ளுவர் சமயவாதி அல்ல என்று நிறுவ, இருந்தாலும் மேலும் சில குறள் வெண்பாக்களைப் பார்ப்போம்.


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

-எவ்வுயிர்க்கும் அரவணைப்பாக வாழ்தல்


சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

-மனைவி/வாழ்க்கைத்துணையின் மனநிறைவு


தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்

-மக்கட்பேற்றுக்கு ஆற்றும் கடமை


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

-எலும்பையும் பிறர்க்கீயும் தியாகம்


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்

-இனிய சொல் பேசுதல், அதைக் கேட்டு மகிழ்பவர் நிச்சயம் இன்னொரு மனிதராகத் தானே இருக்க முடியும்?


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

-பிறப்பால் எல்லா உயிரும் சமம்


இவையாவும் ஒரு சோறு பதம் மட்டுமே. மேலும் என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவிற்குத் தொகுத்திருக்கிறேன். ஆழ ஆராயப்புகுந்தால் சான்றுகள் இன்னமும் அதிகம் கிட்டும்.


எனவே திருக்குறள் ஆன்மிக நூல் தான். ஆனால் ஆன்மிகம் என்பதன் பொருளைப் புரிந்து கொள்வதில் தான் வேறுபாடு இருக்கிறது நமக்கும் பிறர்க்கும். திருக்குறள் முத்தி பற்றிப் பேசவில்லை என்பதால் மட்டுமே அது ஆன்மிக நூல் அல்ல என்று யாரும் அதனை ஒதுக்கவில்லை. திருக்குறள் படி வாழ்ந்துவிட்டால் முத்தி பற்றிய ஆராய்ச்சி மனிதனுக்குத் தேவையே இல்லை என்பது தான் திருக்குறளை பிற பக்தி இலக்கியங்கள் மற்றும் சமய நூல்களிடமிருந்து வேறுபடுத்தி உயரத்தில் வைத்திருக்கும் தனித்துவம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமூகத்தை உற்று நோக்குங்கள். முத்தி எனும் கைக்கெட்டாக் கனியைக் காட்டிக் காட்டி, கதை சொல்லி வயிறு வளர்ப்பவர்கள், மனதை வியாபாரப் பொருளாக்குபவர்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்ற தாழ்வைக் கற்பித்து பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள், எத்தனை பேர்? இவர்களிடம் இருந்து ஒரு மனிதனைக் காத்து, அவன் உயர்வதற்கு அறிவும், உழைப்பும், அறமும் மட்டுமே துணை, பிற ஆன்மாக்களுக்கான தொண்டு செய்தலில் அதற்கு வழி உள்ளது என்று வழிகாட்டும் ‘ஆன்மிக’ நூலே திருக்குறள் ஆகும்.



 
 
 

Σχόλια


© 2023 by Johneh Shankar.

Thinks to live.
Writes to live forever.

Welcome to my Blog. Lessons I've learnt, learning and will learn in my life will come to stay here as words from the bottom of my heart. Thank you for visiting.

bottom of page